September 19, 2024

தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக மணல் குவார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் E.D தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து மதுரை நீதிமன்றம் இனிமேல் தமிழகத்தில் மணல் குவாரிகளில் மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் அதாவது ஒப்பந்ததாரர் இல்லாமல் மணல் குவாரிகளை அரசே நேரடியாக மணல் குவாரிகளை நடத்திட வேண்டும் என்ற ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. ஆகவே இதனை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனடியாக திறக்கவேண்டும். இதனால் மணலுக்கு என்று வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் இயக்கப்படும் மற்றும் அதன் தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதனோடு மட்டுமல்லாது தமிழகத்தில் ஏறத்தாழ 30 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பணித் தொடர ஏதுவாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

அதே போன்று மதுரை நீதிமன்றம் கூறியதை போல 3ஆம் நபர் தலையீடு இல்லாமல் அதாவது ஒப்பந்ததாரர் இல்லாமல் மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும். அரசே நேரடியாக மணல் குவாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது. நேர விரயமும் குறையும் என்பது எங்களது கருத்தாக பதிவு செய்கிறோம்.

தமிழகத்தில் கட்டுமானத்திற்கும் கட்டிடங்களுக்கும் மிக பிரதானமான தேவையான பேஸ்மெண்ட்உயரப்படுத்தும்போது அதனை நிறுவுவதற்கு தேவையான சவுடு மண் குவாரிகளை அதிக அளவில் திறக்க வேண்டும். சவுடு குவாரிகள் திறக்கப்படாமல் உள்ளதால் எண்ணற்ற கட்டிடங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இறக்குமதி மணல் விற்பனை திட்டத்தை உடனடியாக அரசு ஊக்குவிக்க வேண்டும். கடந்த அரசு மணல் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்விற்பனையை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கினால் போட்டி விற்பனையில் மணல் விலை குறைவாக கிடைக்கும். இறக்குமதி மணல் விற்பனையினால் தமிழகத்தில் விவசாயம் பாதிப்போ அல்லது நிலத்தடி நீர் பாதிப்போ ஏற்படப்போவதில்லை என்பதை அரசு உணர்ந்திட வேண்டும்.

தமிழக கனிமங்கள் மணல், எம்.சாண்ட் போன்றவை மற்ற மாநிலங்களுக்கு அதாவது கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கின்றது. ஆனால், தமிழக அரசு நமது நட்பு மாநிலமான ஆந்திராவில் இருந்து ஆற்று மணல் கொண்டுவர அனுமதி வழங்க மறுக்கிறது. ஆந்திராவில் இருந்து மணல் கொண்டு வந்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்போ அல்லது தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்போ ஏற்படப்போவதில்லை. இதனை நடைமுறைப்படுத்திட வேண்டும். அரசு

தமிழ்நாட்டில் 60 கி.மீக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் உள்ளுர் வாகனங்களுக்கான கட்டண சலுகைகளை வழங்கிட ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும்.

ஓட்டுநர்களுக்கு எதிரான சட்டம் (Hit & Run) 106(2)ஐ ரத்து செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2004-ல் உச்சநீதிமன்றம் அதிகபாரம் ஏற்றும் லாரிகள் மீதும், ஏற்றிவிடும் குவாரிகள் மீதும் கடுமையான பிணை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாட்டில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகின்ற 08.08.2024 அன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெறும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

About Author