இம்மானுவேல் செஸ் சென்டர் (ECC), மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியுடன் இணைந்து, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) Chess in Education Commission (CIE) உடன் கூட்டு முயற்சியாக,
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மார்கரெட் மூர் அரங்கில், இந்தியாவின் முதல் Chess in Education (CIE)” கருத்தரங்கினை சிறப்பாக நடத்தியது.
இந்த கருத்தரங்கில் 750-க்கும் மேற்பட்ட மாணவிகள், 70 பேராசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கர்நாடக மாநிலத்தின் மைசூரு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தின் பல உள் மாவட்டங்கள், கிராமப்புறப் பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் வருகை தந்தது, கல்வியில் சதுரங்கத்தின் பயன்பாடு குறித்து நாடு முழுவதும் உருவாகி வரும் ஆர்வத்தையும் தாக்கத்தையும் வெளிப்படுத்தியது. சதுரங்கம் அறிவுத்திறன் வளர்ச்சி, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் கல்வி முறையை மேம்படுத்தும் வலுவான கருவி என்பதையும் இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, FIDE Chess in Education Commission-இன் செயலாளர் ரிட்டா அட்கின்ஸ் அவர்கள், சதுரங்கம் தரும் பயன்கள் குறித்து ஆழமானதும் கருணையுடனும் கூடிய பிரதான உரையை வழங்கினார்.
அவரது உரை, ஆராய்ச்சி, வகுப்பறை நடைமுறை மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், கார்ப்பரேட் ஆலோசகர்
ஜி. எஸ். சாமுவேல் மற்றும் இம்மானுவேல் செஸ் சென்டரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் டேவிட் சந்திரன் ஆகியோரின் சிறப்பு பங்கேற்பு நிகழ்ச்சிக்கு கௌரவத்தையும் உற்சாகத்தையும் சேர்த்தது. FIDE Senior Lead Instructor, FIDE Trainer மற்றும் Canditate Master டாக்டர் எபினேசர் ஜோசப் அவர்கள், கல்வி, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் 21-ஆம் நூற்றாண்டுத் திறன்களில் சதுரங்கத்தின் தாக்கம் குறித்து உரையாற்றி, சதுரங்கப் பலகையில் பெறும் மூலோபாய சிந்தனை வாழ்க்கையில் தீர்வு காணும் திறன், முடிவு எடுக்கும் ஆற்றல் மற்றும் மன உறுதியை எவ்வாறு வளர்க்கிறது என்பதையும் விளக்கினார்.
நிகழ்ச்சியை நடத்திய மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, அதன் முதல்வர் டாக்டர் லில்லியன் ஜாஸ்பர் அவர்களின் தலைமையில், அறிவாற்றலுடனும் , வரவேற்புடனும் கூடிய சிறந்த சூழலை ஏற்படுத்தியது. முழுமையான கல்வி மற்றும் புதுமை அணுகுமுறைக்கு கல்லூரி வழங்கும் முக்கியத்துவம், இந்த முன்னோடி முயற்சிக்கு ஏற்ற தளமாக அமைந்தது.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?