June 5, 2026

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு. கார்த்திக் மோகன் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல்

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரால் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. கார்த்திக் மோகன் அவர்கள், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் இன்று காலை தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வின்போது, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெற்றியழகன் அவர்கள், வில்லிவாக்கம் மேற்கு பகுதிச் செயலாளர் திரு. கூ. பி. ஜெயின் அவர்கள் மற்றும் வில்லிவாக்கம் கிழக்குப் பகுதிச் செயலாளர் திரு. வே. வாசு அவர்கள் உடனிருந்தனர்.
மேலும் வேட்புமனு தாக்களின் முன்னதாக, வில்லிவாக்கம் தொகுதியின் முக்கிய வீதிகள் வழியாக திரு. கார்த்திக் மோகன் மற்றும் திரு. பி.கே. சேகர்பாபு ஆகியோர் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவியும், முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆசி பெற்ற வேட்பாளராக தோழமைக் கட்சிகளின் வாழ்த்துக்கள் பெற்ற வேட்பாளராக கார்த்திக் மோகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மக்கள் நல முதல்வரால் நிறைய திட்டங்களைத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது, இந்த தொகுதியில் 75 சதவீத வாக்குகளை திமுக பெரும், என்று கூறினார்.
மனுத் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு. கார்த்திக் மோகன், “வில்லிவாக்கம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது இலக்கு. திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

About Author